|
|
ஜனன-மரண தீட்டு விபரம்
ஜனனம் மற்றும் மரணத்தினால் ஏற்படும் தீட்டு விளக்கங்கள்
ஒரு ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என
வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள ஆண்கள் அனைவரும் பங்காளிகள்
எனப்படுவர். மூல புருஷன் எனப்படும் ஒரு ஆண் வழியாக தோன்றும் மகன்-பேரன்-கொள்ளுப்பேரன்-எள்ளுப்பேரன்
எள்ளுப்பேரனுக்கு மகன் - எள்ளுப்பேரனுக்குப் பேரன் வரையில் மூல புருஷனையும் சேர்த்து 7 தலைமுறைகள்
ஆகின்றது. இதற்குள் அடங்கும் அத்தனை பங்காளிகளில் யாராவது ஒருவர் இல்லத்தில் ஏற்படும் பிறப்பினாலும்
(ஜனனத்தாலும்) அல்லது இறப்பினாலும் (மரணத்தாலும்) அனைவருக்கும் தீட்டு உண்டாகும்.
- தீட்டுக் காலத்திலும் கண்டிப்பாக சந்தியாவந்தனம்
பண்ணவேண்டும். காயத்திரி எண்ணிக்கை மட்டும் 10 காயத்திரியுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
- மற்ற காம்யமான ஜபங்கள் கிடையாது.
தாய் வழியாகவும் சில தீட்டுகள் ஏற்படும். தீட்டு பற்றிய விஷயங்களுக்கு மூல ஆதாரம் "வைத்யநாத
தீக்ஷிதீயம் ஆசெளச காண்டம்" ஆகும்.
இங்கு மிகவும் சுலபமான முறையில் தீட்டு விஷயங்கள் விளக்கப் படுகிறது. மிகவும் நுணுக்கமான
விஷயங்களை அறிய ஒரு நாள் அவகாசத்துடன் ஈமெயில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தீட்டு என்றால் என்ன? என்று கூட சிலர் கேட்கிறார்கள்.
தீட்டுக் காரியங்கள் நடக்கும் இடத்தின் மற்றும் பொருடக்களின் சம்மந்தம் ஆன்மீகம் மற்றும்
விஜ்ஞான ரீதியாகவும் விலக்கத் தக்கது என்பது கருத்து. ஆன்மீகம்
தீட்டு என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது. விஜ்ஞானம்
ஹைஜீனிக் என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது.
எனவே ஆன்மீக ரீதியாக யார் யார் எவ்வளவு நாட்கள் பிறரிடமிருந்தும், வழக்கமான மேம்பாட்டு
வழிமுறைகள் நெறிமுறைகளிலிருந்தும் சில காரணங்களை உத்தேசித்து விலகி நிற்கச் சொல்கிறது.
உறவைக் கொண்டு அவர்களின் விலகி நிற்கவேண்டிய கால அளவை வெகு அழகாக நிச்சயித்துள்ளார்கள்.
உறவு உள்ள அளவிற்கு எங்களுக்கு நெருக்கமில்லை நாங்கள் ஏன் அதைக்
கடைப்பிடிக்க வேண்டும்? என்று சிலர் கேட்கிறார்கள்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் கார் செல்லும் வழி, மோட்டார் சைக்கிள் செல்லும் வழி,
பஸ் செல்லும் வழி, கனரக வாகனங்கள் செல்லும் வழி, நடந்து செல்லும் வழி என பாதையைப் பகுத்து
வைத்து இந்தந்த பாதையில் செல்வோர் இன்னின்ன வேகத்தில் செல்ல வேண்டும் என்று நிர்ணயம்
செய்துள்ளார்கள். காரில் செல்பவன் தனக்குள்ள பாதையை விடுத்து மற்ற பாதையில் சென்று கொண்டு நான்
நடந்து செல்லவில்லையாதலால் எனக்கு அந்தவிதி பொருந்தாது என்று கூறி அவனுடைய வேகத்திற்குச்
செல்லமுடியாது.
அதுபோல, இந்த உறவு இருப்பவர்களுக்கு இந்த அளவு நெருக்கம் இருக்கும் இருக்கவேண்டும்
என்பது பொது விதி. அப்படி நெருக்கம் இல்லாதது விதிசெய்தவன் குற்றமல்ல. இதுபோன்ற விதிவிலக்குகளுக்காக
வேண்டி விதியை மாற்றி அமைக்க முடியாது. எனவே (உறவு முறையில்) நெருக்கம் இருந்தாலும்
இல்லாவிட்டாலும் உறவுமுறையுடன் பிறந்து தொலைத்த காரணம் கருதி விதிப்படி அநுட்டிப்பதே
விவேகமாகும்.
- தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றையபொழுது அவனுக்குத்
தீட்டு.
- தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு (ஸங்கவ காலம்) மேல்தான் தீர்த்தமாடி
தீட்டை முடிக்க வேண்டும்.
- பிறப்பு, இறப்பு, மாதவிடாய் (தூரம்) இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை(270
நிமிடங்கள்)க்கு முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.
- ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்து கொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய் வேண்டும்.
- ஸந்யாசிகளுக்கு (முன் ஆச்ரம) மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நாநம்.
- 88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது.
- ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.
- நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.
- ஸ்நானம் பண்ணமுடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற
ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டுவிட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து
முறை தீர்த்மாடவேண்டும்.
- அதுபோல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை
உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.
- ச்ராத்தத்தின் நடுவில் (ச்ராத்த சங்கல்பம் ஆனபின்) தீட்டுத் தெரிந்தால் ச்ராத்தம் முடியும்வரை
கர்த்தாவுக்குத் தீட்டில்லை.
- வரித்தபின் போக்தா (ச்ராத்த ஸ்வாமி)க்கு தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும்வரை
தீட்டில்லை.
- விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.
- ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும்.
மற்ற சில கவனிக்கத் தக்கவை
- ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.
- துர் மரணம் செய்து கொண்டவனுக்கு 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி
ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.
- தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.
- தற்கொலை செய்துகொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.
- கர்மா செய்பவனுக்கு 11ம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.
- கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.
- பிறப்புத் தீட்டுள்ளவனை 4 நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.
- ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.
- தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.
- பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் (உதகதானம்) தனியாக இல்லை.
- மனைவி கர்பமாக இருக்கும்போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.
- சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.
- சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.
- சிராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.
- தன் மனைவி கர்பமாய் இருக்கும்போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.
- ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.
- தீட்டுக் காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.
- தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.
- ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது.
- சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாடவேண்டும்.
- சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் முதல்தான் தீட்டு
- பங்காளிகளைப் பொறுத்தவரையில் ஒரு தீட்டு காத்துக் கொண்டிருக்கும்போது மற்றொரு தீட்டு
வந்தால் முன் வந்த தீட்டு முடியும்போது பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.
- உதாரணமாக 10நாள் தீட்டில் 4ம் நாள் மற்றொரு 10 நாள் தீட்டு வந்தால் முன் வந்த தீட்டின்
10ம் நாளுடன் பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.
- ஆனால் முன் வந்த 3 நாள் தீட்டுடன் பின் வந்த 10 நாள் தீட்டு முடியாது.
- பத்துநாள் தீட்டின் இடையில் வந்த 3 நாள் தீட்டுடன் 10 நாள் தீட்டு முடியாது. 10ம் நாள்தான்
சுத்தி.
- பத்தாம் நாள் இரவில் வந்த புதிய பத்து நாள் தீட்டிற்கு அதிகப்படியாக 3நாள் மட்டும்
காத்தால் போதும்.
- ஆனால் பிறப்புத் தீட்டின் இறுதியில் வரும் பிறப்புத் தீட்டிற்காக மேலும் 3 நாள் காக்கத்
தேவையில்லை.
- மரணத் தீட்டு ஜனனத் தீட்டைக் காட்டிலும் பலம்
- மரணத் தீட்டின்போது வந்த பிறப்புத் தீட்டு மரணத் தீட்டுடன் முடியும்.
- பெற்ற குழந்தை பத்துநாள் பிறப்புத் தீட்டிற்குள் இறந்தால் அதற்காகத் தனியாகத் தீட்டில்லை.
பிறந்ததிலிருந்து 10 நாள் விலகும். ஒரு வேளை 10ம் நாள் மரணமானால் மேலும் 2 நாள் அதிகரிக்கும்.
10ம் நாள் இரவு ஆனால் 3 நாள்.
- பங்காளிகளுக்கு மேற்படி 3 நாள் தீட்டில்லை.
- அதிக்ராந்தாசெளசம் என்பது தீட்டுக்காலம் முடிந்தபின்
தீட்டுப்பற்றி அறிந்தவருக்கு விதிக்கப்படுவது.
- பிறப்புத் தீட்டில் அதிக்ராந்தாசெளசம் இல்லை.
- பத்து நாள் தீட்டை பத்தாம் நாளுக்குமேல் 3 மாதங்களுக்குள் கேட்டால் 3 நாள் தீட்டு.
- மூன்று மாதத்திற்கு மேல் 6 மாதத்திற்குள் கேட்டால் ஒன்றரை நாள்.
- 6 மாதத்திற்கு மேல் ஒரு வருடத்திற்குள் ஒரு நாள்.
- அதன் பிறகு ஸ்னானம் மாத்திரம்.
- 3 நாள் தீட்டை பத்து நாட்களுக்குள் கேட்டால் 3நாள் தீட்டு. பத்து நாட்களுக்குப் பிறகு
ஸ்னானம் மாத்திரம்.
- 1 நாள் தீட்டுக்கு அதிக்ராந்த ஆசெளசம் கிடையாது.
- மாதா பிதாக்களின் மரணத்தில் புத்திரர்களுக்கும், கணவனனின் மரணத்தில் பத்தினிக்கும்
எப்போது கேட்டாலும் அதிலிருந்து 10 நாள் தீட்டு உண்டு.
சில தீட்டின் முடிவில் புருஷர் (ஆண்)களுக்கு ஸர்வாங்க க்ஷவரம்
(வபனம்) செய்து கொண்டால்தான் தீட்டுப் போகும் என்பது சாஸ்திரம். ஸர்வாங்கம் என்பது
:
- தலையில் சிகை (குடுமி) தவிர்த மற்ற இடம்
- முகம், கழுத்து
- இரு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து முழங்கைக்குக் கீழ் உள்ள ஒரு சாண் இடம் தவிர்த்து
மற்ற இடம்.
- கழுத்துக்கீழே பாதங்கள் வரை, பிறப்புறுப்பு உட்பட பின் முதுகு தவிர்த்த மற்ற அனைத்து
இடங்களிலும் உள்ள ரோமங்களை அறவே அகற்றுவது ஸர்வாங்க க்ஷவரம் ஆகும்.
கீழ்கண்ட மரண தீட்டுகளின் முடிவில் (முடிகின்ற நாள் அன்று
- அதாவது பத்து நாள் தீட்டில் 10ம் நாள் காலை)ஸர்வாங்கம் அவசியம்.
- இறந்த பங்காளி தன்னைவிட வயதில் பெரியவரானால். வயதில் சிறியவர்களுக்கு வபனம் தேவையில்லை
ஆனால் தர்பணம் உண்டு.
- மாதாமஹன், மாதாமஹீ, மாமன், மாமி, மாமனார், மாமியார் இவர்கள் மரணணத்தில் வனம் உண்டு.
- இறந்தவர் பெரியவரா இல்லையா என ஸந்தேஹம் இருந்தால் வபனம் செய்து கொள்வதே சிறந்தது.
- தீட்டு முடியும் தினம் வெள்ளிக் கிழமையானால் முதல்நாளான வியாழக் கிழமையிலேயே வபனம்
செய்து கொள்ள வேண்டும். எக்காரணத்தாலும் வெள்ளிக்கிழமை க்ஷவரம் செய்து கொள்வதைத்
தவிர்க்க வேண்டும்.
- கல்யாணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் எந்தத் தீட்டும் இல்லை.
- பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு பிரசவித்த பத்து நாளுக்குப் பிறகு எவரும் காக்கத் தேவையில்லை.
- பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு 40 நாட்கள் தீட்டு
- ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு 30 நாட்கள் தீட்டு
- பிறந்தது பெண் குழந்தையானால் கீழ்கண்டவர்களுக்கு பத்து நாட்கள் தீட்டு: குழுந்தையின் உடன் பிறந்தோர்.
மறுமனைவி(களு)க்குப் பிறந்த ஸஹோதரர்கள்
அதுபோல குழந்தையின் தகப்பனாரின் ஸஹோதரர்கள்
குழந்தையின் தகப்பனாரின் தகப்பனார்
(பிதாமஹர்) அவரின் ஸஹோதரர்கள். மேற்கண்டோர் திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு.
- குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு 3 நாள் தீட்டு
- குழந்தை பெற்றவளின் ஸஹோதரன், மாமா, பெரியப்பர, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டில்லை
ஆயினும் அவர்களில் யாருடைய பொருட் செலவிலாவது ப்ரஸவம் ஆனால், ப்ரஸவம் எங்கு நடந்தாலும்
செலவு செய்தவர்களுக்கு ஒரு நாள் தீட்டுண்டு.
ஜனனத்தில் குழந்தை பெற்றவளுக்கு மட்டும் சட்டி தொடடுதல் அதாவது சமையலறைக்கு வந்து
சமையல் செய்ய வீட்டுக் காரியங்களில் அனைவருக்கும் உள்ள பத்து நாள் தீட்டு முடிந்தவுடன்
ஈடுபட முடியாது.
ஆண் குழந்தையானால் 30 நாளும், பெண் குழந்தையானால் 40 நாளுக்குப்பிறகே வீட்டுக் காரியங்களில்
ஈடுபட முடியும்.
இனி மரணத்தினால் பெண்களுக்கு மட்டில் (கணவர் மற்றும் கணவர் குடும்பத்தாருக்குக் கிடையாது) ஏற்படும் தீட்டுகள் விபரம் கீழ்வறுமாறு --
பெண்களுக்கு திருமணத்தின் மூலம் கோத்திரம் வேறு படுகிறது. கணவனின் கோத்திரத்தை (சந்ததியைச்)
சேர்ந்தவர்களின் பிறப்பு இறப்பே அவளுக்கும் உரியதாகும். ஆயினும் பிறந்தகத்தைச் சேர்ந்த
சிலரது மரணத்தினால் பெண்களுக்கு மட்டும் 3 நாள் வரை தீட்டு சம்பவிக்கும் இந்த தீட்டு
அவர்களுடைய கணவருக்குக் கிடையாது. தூரமான ஸ்த்ரீ தனித்திருந்து தீட்டுக் காப்பது போல
இதை அவள் மட்டும் காக்க வேண்டியது.
பெண்களின் கீழ்க்கண்ட உறவினரின் மரணத்தில் அவளுக்கு மட்டும்
3 நாள் தீட்டு:
- உபநயனமான உடன்பிறந்த ஸஹோதரன்
- உபநயனமான மருமான் (ஸஹோரதன் பிள்ளை)
- உபநயனமான ஸஹோதரியின் பிள்ளை
- இளைய அல்லது மூத்த தாயார் (தந்தையின் வேறு மனைவிகள்)
பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம்.
பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே
பொருள்.
கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் பெண்களுக்கு
பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்)
- தந்தையுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா
- தாயுடன் பிறந்த சித்தி, பெரியம்மா
- தாயின் ஸஹோதரர்கள் (மாதுலன்)
- தந்தையின் ஸஹோதரிகள் (அத்தை)
- மேல் நான்கு வகையினரின் பெண்கள், பிள்ளைகள்
- தந்தையின் தந்தை - பிதாமஹன்
- தந்தையின் தாய் - பிதாமஹி
- தாயின் தந்தை - மாதாமஹன்
- தாயின் தாய் - மாதாமஹி
- உடன் பிறந்த ஸஹோதரி
- ஸஹோதரியின் பெண்கள்
- மருமாள் (ஸஹோதரனின் பெண்)
கீழ்கண்டவர்கள் உபநயனமான ஆண், விவாஹமான பெண் மரணத்தால் பெண்களுக்கு
மட்டும் 1 நாள் தீட்டு.
- தாயின் மூத்தாள் அல்லது இளையாள் (ஸபத்னீ மாதா)குமாரன்
- ஸபத்னீ மாதா புத்ரீ (குமாரத்தி)
- ஸபத்னீமாதா ஸஹோதர, ஸஹோதரிகள்
- ஸபத்னீமாதா பிள்ளையின் பிள்ளை, பெண்
- ஸபத்னீ மாதா பெண்ணின் பிள்ளை, பெண்
- ஸபத்னீமாதா ஸஹோதரியின் பிள்ளை,பெண்
மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள் ஒருநாள், ஒன்றரை நாள், மூன்று நாள், பத்து நாட்கள் என நான்கு வகைப்படும்.
அவை தனித்தனியாக பிரித்து கீழே வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன. முதலில் பத்துநாளில் ஆரம்பித்து, பின்
மூன்று நாள், ஒன்றரை நாள், ஒரு நாள் என எந்தப் பகுதியில் தங்களுடைய உறவு முறை வழங்கப்பட்டுள்ளது
என தீர்மானித்துக்கொள்ளவும். சில சமயம் இருவிதமான உறவு முறைகள் இருக்கலாம். அப்படி இருக்கும்போது
அதிகப்படியான தீட்டு எந்த உறவினால் ஏற்படுகிறதோ அந்தத் தீட்டையே அநுஷ்டிக்கவேண்டும்.
10 நாள் தீட்டு
பங்காளிகளில் யார் ஒருவர் இறந்தாலும் 7 தலை முறைகளுகு்கு உட்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும்
அவர்கள் மனைவிகளுக்கும் 10 நாள் தீட்டு உண்டு.
பிறந்து பத்து நாட்களே ஆன புருஷ (ஆண்)குழந்தை இறந்தால் கீழ்க்கண்டவர்களுக்கு பத்து
நாள் தீட்டு.
- இறந்தவர் (குழந்தை)யின் தந்தை
- தாய், மற்றும் மணமான ஸஹோதரார்கள்
மேற்படி இறந்தது மணமாகாத ஒரு பெண் (குழந்தை) ஆனாலும் மேற்கண்ட அனைவருக்கும் 10 நாள்
தீட்டு.
7 வயதுடைய உபநயனம் ஆன பையன் இறந்தால் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு.
7 வயதுக்கு மேல் இறந்தது ஆண் ஆனால் உபநயனம் ஆகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் பங்காளிகள்
அனைவருக்கும் 10 நாள் தீட்டு.
3 நாள் தீட்டு
கீழ்க்கண்ட உறவினர்களின் மரணத்தில் ஆண்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுகு்கும் 3 நாள்
தீட்டு.
- தாயின் தந்தை (மாதாமஹர்)
- தாயின் தாய் (மாதாமஹி)
- தாயின் ஸஹோதரன் (மாதுலன்)
- மாமன் மனைவி (மாதுலானி)
- மாமனார்
- மாமியார்
- தாயின் உடன் பிறந்த ஸஹோதரி (சித்தி,பெரியம்மா)
- தந்தையின் ஸஹோதரிகள் (அத்தைகள்)
- ஸஹோதரியின் மகன் (உபநயனமானவன்)மருமான்
- உபநயனமான பெண்வயிற்றுப் பேரன்(தெளஹித்ரன்)
- ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள் (ஸமானோதகர்கள்)
- கல்யாணமான பெண்
- கல்யாணமான ஸஹோதரி
- ஸ்வீகாரம் போனவனைப் பெற்றவள் (ஜனனீ)
- ஸ்வீகாரம் போனவனை ஈன்ற தந்தை (ஜனக பிதா)
- ஸ்வீகாரம் போன மகன் (தத்புத்ரன்)
- 7 வயதுக்கு மேற்பட்ட கல்யாணமாகாத பங்காளிகளின் பெண்.
- 2 வயதுக்கு மேற்பட்ட ஆனால் உபயநயனமாகாத பங்காளிகளின் ஆண் பிள்ளைகள்.
- 7 தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள்.
பக்ஷிணீ
பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம்.
பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே
பொருள். பகலில் அறியப்பட்டு பகல், இரவு, மறுநாள் பகலில் தீட்டு முடிந்துவிட்டாலும்
மறுநாள் காலையிலேயே ஸ்னானத்திற்குப் பிறகு தீட்டுப் போகும்.
கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் ஆண்களுக்கு
பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்).
- அத்தையின் பிள்ளை அல்லது பெண்
- மாமனின் பிள்ளை அல்லது பெண்
- தாயின் ஸஹோதரியின் பெண்கள்-பிள்ளைகள்
- தன்னுடைய ஸஹோதரியின் பெண்
- தன் ஸஹோதரனின் மணமான பெண்
- சிற்றப்பன், பெரியப்பன் பெண்கள்
- தன் பிள்ளை வயிற்றுப் பேத்தி (பெளத்ரீ)
- பெண் வயிற்றுப் பேத்தி (தெளஹித்ரி)
- உபநயனமாகாத பெண் வயிற்றுப் பிள்ளை (தெளஹித்ரன்)
- உபநயனமாகாத மருமான் (ஸஹோதரி புத்ரன்)
கீழ்க்கண்டோர் மரணத்தில் புருஷர்களுக்கு ஒரு நாள் தீட்டு. (இளைய, மூத்தாள் தாயார்களுக்கு
ஸபத்னீ மாதா என்று பெயர்).
- ஸபத்னீ மாதாவின் ஸஹோதரன், ஸஹோதரி
- ஸபத்னீ மாதாவின் பெண் மற்றும் மேற்சொன்ன 3வகை உறவினரின் பெண்கள் பிள்ளைகள்.
- ஸபத்னீ மாதாவின் தாய், தந்தை
- ஸபத்னீ மாதாவின் பெரியப்பா, சித்தப்பா
- கல்யாணமாகாத 6 வயதுக்குட்பட்ட (2 வயதுக்கு மேற்பட்ட) பங்காளிகளின் பெண்.
- ஸ்வீகாரம் சென்ற ஆணின் பிறந்தகத்தில் உடன் பிறந்த (முன் கோத்ர) ஸஹோதரர்கள்
- ஆறு மாதத்திற்கு மேற்பட்ட இரண்டு வயதிற்குட்பட்ட பங்காளிகளின் ஆண் குழந்தை.
- குழந்தையில்லாத மனைவி இறந்தபின் அவளைப் பெற்றவர்கள் மாமனார் மாமியார் இறந்தால்.
|
Why & How to pay?
|